|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
Meenakshi
Joined: 23 Dec 2007 Posts: 119 Location: United States Of America
|
Posted: Sat Mar 28, 2009 7:43 am Post subject: Lyrics - Kaattrukkenna veli - Avargal |
|
|
படம்: அவர்கள்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: மெல்லிசை மன்னர்
காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது
மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் எது?
(காற்றுக்கென்ன)
நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று
நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று
கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு
காலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு
(காற்றுக்கென்ன)
தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னைக் கண்டேன்
சீர் கொண்டுவா சொந்தமே இன்று நான் பெண்மைக் கொண்டேன்
பிள்ளை பெற்றும் பிள்ளையானேன், பேசி பேசி கிள்ளயானேன்
கோவில் விட்டு கோவில் போவேன், குற்றமென்ன ஏற்றுக்கொள்வேன்
(காற்றுக்கென்ன)
கே. பாலசந்தர் இயக்கத்தில் 1977- ல் வெளிவந்த படம் அவர்கள். கமலஹாசன், ரஜினிகாந்த், ரவிக்குமார் மற்றும் சுஜாதா அவர்கள் நடித்துள்ள இந்த படத்தில் எல்லோருமே அந்தந்த கதா பாத்திரத்துக்கு பொருத்தமாக நடித்திருந்தார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்திருந்தார்கள் என்றே சொல்லலாம். இந்த படத்தில் சுஜாதா, ரவிக்குமார் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிப்பார்கள். இதற்கிடையில் சுஜாதாவின் தந்தையின் வேலை பம்பாய்க்கு மாற்றல் ஆகிவிட, அவர் உடன் பம்பாய் செல்லும் சுஜாதா அங்கே ரஜினிகாந்தை சந்திக்கிறார். சூழ்நிலை காரணமாக அவரை திருமணமும் செய்துகொள்வார். திருமண வாழ்வில் ரஜினியால் பல இன்னல்களை அனுபவிக்கும் சுஜாதா, பொறுக்கமுடியாமல் அவரை விவாகரத்து செய்துவிட்டு கையில் குழந்தையுடன் மீண்டும் சென்னைக்கே வந்து விடுவார்.
அப்பொழுது, சென்னையில் தன் பழைய காதலனை சந்திக்கிறார். இருவரிடையேயும் சில வருடங்களாக மனதில் புதைந்திருந்த நேசம் மீண்டும் மலர்கிறது. அதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். அப்பொழுது அவர்கள் மிகவும் சந்தோஷமாக எல்லா இடங்களுக்கு செல்லும்போது, பின்னணியில் இந்த அழகான பாடல் இடம்பெறும்.
பாலச்சந்தரின் அருமையான படங்களில், இந்த படம் மிகவும் குறிப்பிடத்தக்கது. அவர் படத்தின் பாடல் காட்சிகள் எல்லாமே கதையை தழுவியே இருக்கும். அந்த பாடல்கள் மூலமே நாம் ஓரளவுக்கு படத்தின் கதையை தெரிந்து கொண்டுவிட முடியும். இந்த பாடலும் அது போன்றதுதான்.
காதலனை மணம் முடிக்க முடியாமல், விதி வசத்தால் வேறு ஒருவனை மணந்து பல இன்னல்களை அனுபவித்து, அவனுடன் திருமண உறவையும் முறித்துக் கொண்டு, கையில் குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண், மீண்டும் தன் காதலனையே மணம் முடிக்க சந்தர்ப்பம் கிடைத்தால், அந்த பெண்ணின் உள்ளத்தில் பொங்கும் சந்தோஷத்தை விவரிக்கும் ஒரு அற்புதமான பாடல் இது.
இந்த பாடலில் அந்த பெண்ணின் மனதில் பொங்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு பெற்றது, இசையா? இல்லை பாடல் வரிகளா? என்று பட்டி மன்றம் வைத்தால் யாரலயுமே தீர்ப்பே சொல்ல முடியாது.
இந்த பாடலின் வரிகள் எல்லாமே எளிமையாக அதே சமயத்தில் மிகுந்த அர்த்தமுள்ளதாக இருக்கும்.
பாடலின் தொடக்க வரிகளே எங்கும் சுதந்திரமாக வீசும் காற்றையும், எதற்கும் அடங்காமல் பொங்கும் கடலையும் அந்த பெண்ணின் மனதிற்கு உதாரணம் காட்டி இருப்பது.
மேலும் சரணத்தில் வரும் //காலம் என்னை வாழ்த்தும்போது, ஆசைக்கென்ன தட்டுப்பாடு......//
என்று தனக்கு கிடைக்கபோகும் இந்த மறு வாழ்வை வாழப்போவதில்தான் அந்த பெண்ணின் மனதில் எவ்வளவு ஆசை என்பது,
தனக்காக, தான் ஆசைப்பட்ட வாழ்வை நிஜத்தில் வாழத் தொடங்கும்போது, அந்த வாழ்வில் தன்னையே தான் உண்மையாக காணத் தொடங்குவதை,
//தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னை கண்டேன்//என்றும்
//பிள்ளை பெற்றும் பிள்ளையானேன்.......//
ஒரு குழந்தைக்கு தாயான பின்னும், தானே தற்பொழுது ஒரு குழந்தையை போல குதூகலிக்கும் மனத்துடன் இருப்பது,
என்றும் எவ்வளவு அழகாக எழுதி இருக்கிறார்.
இவ்வளவு அற்புதமான வரிகளுக்கு மெல்லிசை மன்னரின் இசையும் ஒரு 'தேவ கானம்தான்'
இந்த பாடல், கோரஸ் மற்றும் ஜானகி அவர்கள் பாடும் ஹம்மிங்கில் அழகாக தொடங்கும். இந்த ஹம்மிங்கும் பல்லவியின் வரிகளுக்கு ஏற்றாற்போல் தடையில்லாமல் வீசும் காற்றை போலவும், பொங்கி ஆடி வரும் கடலைப் போலவும் நம் காதில் தேனாக பாயும். இந்த ஹம்மிங் இசைக்கு பின்னணியாக, மிக அழகாக மிருதங்கம். இந்த பாடலில் நம் நெஞ்சை அள்ளிக்கொண்டு போவது இந்த மிருதங்கமும், வயலினும்தான்.
நம் மெல்லிசை மன்னரின் பல பாடல்களில் மிருதங்கத்திற்கு என்றுமே ஒரு தனி அழகும், கம்பீரமும் இருக்கும். முதல் சரணத்திற்கு முன் வரும் இந்த மிருதங்கமும், வயலினும் வேகமாக ஒரு குழந்தை ஓடி வருவதை போல நம்மிடம் ஓடி வரும். அப்பொழுது அந்த இசையை அப்படியே ஒரு குழந்தையை போல அள்ளிக்கொள்ள தோன்றும். lஅதை தொடர்ந்து கோரஸ் ஸ்வரம் பாட, அதனுடன் ஜானகியின் ஹம்மிங் அழகாக இணையும். சரணத்தின் வரிகள் ஒரு முறை வயலினில் முடியும். மறுமுறை அதுவே கோரஸ் ராகத்தில் முடியும். இந்த பாடலின் பல இடங்களில் வயலின் பாடும் அதே ராகத்தை கோரஸ் பாடுவது கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்.
இரண்டாது சரணத்திக்கு முன் மீண்டும் வயலினும், கோரஸ் இரண்டும் இசைக்க, அதை மிருதங்கம் தொடர்வதற்கு பதிலாக கிடார் தொடருவது சற்று வித்தியாசமாக அழகாக இருக்கும். ஆனால் இரண்டு சரணத்திலுமே பின்னணியில் மிருதங்கத்தின் இனிமையான ஆக்கிரமிப்புதான். இந்த பாடல் முடிவதும் கோரஸ் ஹம்மிங்குடன் இந்த மிருதங்கத்தில்தான். பாடல் முடியும்போதே மீண்டும் தொடங்காதா என்று தோன்றும்.
ஜானகி அவர்களும் இந்த பாடலை மிகவும் சிறப்பாக பாடி உள்ளார். இந்த பாடலில் அந்த பெண்ணின் உள்ளம் பொங்குவதை போல் ஜானகி அவர்கள் குரலில் இனிமை பொங்கும். மெல்லிச மன்னரின் இசையில் ஜானகி அவர்கள் பாடி உள்ள பல பாடல்கள் மெகா ஹிட் தான். அதிலும் இந்த பாடல், 'அவளுக்கென்று ஒரு மனம்' படத்தில் வரும் 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' இதெல்லாம் நம் ஆன்மாவையே தொடும் பாடல்கள்.
இந்த பாடலை நம் மெல்லிசை மன்னர் இசைத்திருப்பது 'கரஹரபிரியாவின்' ஜன்யமான 'மணிரங்கு' என்ற ராகத்தில். இது போன்ற அபூர்வ ராகத்தில் எல்லாம் எவ்வளவு அழகாக நம் மெல்லிசை மன்னர் பாடல் இசைத்திருக்கிறார் என்று எண்ணும்போதே, உணர்ச்சியில் நம் மனமும் பொங்குகிறது.
Last edited by Meenakshi on Sun Jun 21, 2009 12:51 am; edited 1 time in total |
|
Back to top |
|
|
parthavi
Joined: 15 Jan 2007 Posts: 705 Location: Chennai
|
Posted: Sun Apr 05, 2009 6:49 pm Post subject: |
|
|
மீனாட்சி அவர்களே,
வழக்கம்போல மீண்டும் ஒரு நல்ல பாடல் ஆராய்ச்சி. பாடலின் பின்னணி (கதை),பாடல் வரிகளின் சிறப்பு, இசையின் பரிமாணங்கள் என்று முழுமையாக விளக்கிஇருக்கிறீர்கள். இந்தப் பாடலைப் பற்றி வேறு யாராவது, எதுவும் சொல்ல வேண்டும் என்றால், எதையும் மீதி வைக்கவில்லை நீங்கள்!
மனமார்ந்த பாராட்டுககள்.
காற்றுக்கில்லை வேலி - என்
பாராட்டு இல்லை போலி!
(டி. ராஜேந்தர் மன்னிக்கவும்!)
தொடரட்டும் உங்கள் பணி.
நன்றி. _________________ P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/ |
|
Back to top |
|
|
Meenakshi
Joined: 23 Dec 2007 Posts: 119 Location: United States Of America
|
Posted: Mon Apr 06, 2009 2:10 am Post subject: |
|
|
அன்புள்ள பார்தவி, ஷங்கர் உங்கள் இருவருக்கும் நன்றி.
என்னை பொறுத்தவரை நம் மெல்லிசை மன்னரின் பாடல்களை நான் எந்த அளவு ரசிக்கிறேன் என்பதை என்னால் வரையறுத்து சொல்லவே முடியாது. அப்படி நான் ரசிக்கும் அவரின் பாடல்களை பற்றி எழுதும்போது, அதில் ஒரு சதவிகிதம்தான் என்னால் எழுத முடிகிறது. நாம் எல்லோருமே அப்படித்தான் என்பது என் கருத்து. எனக்கு கர்நாடக சங்கீதத்தில் ஆழ்ந்த அறிவு இல்லாததால் அவரின் பாடல்களைப் பற்றி இன்னும் சிறப்பாக விவரித்து எழுத முடியவில்லையே என்று மிகவும் ஆதங்கமாக இருக்கிறது. பல பாடல்களில், பின்னணி இசையில் வரும் வாத்தியங்களின் இனிமையான இசையை என்னால் மனமுருகி ரசிக்க மட்டுமே முடிகிறதே தவிர, அவர் என்னென்ன வாத்தியங்களை அவர் இசைத்திருக்கிறார் என்றே எனக்கு தெரியவில்லை. அதனால் அவர் பாடல்களில் வரும் பின்னணி இசையை பற்றி முழுமையாக எழுத முடியவில்லை. அந்த இசை கடவுளின் பாடல்களைப் பற்றி கடுகளவாவது எழுத முடிவது சந்தோஷத்தையும் திருப்தியையும் தருகிறது. |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|